முதல் செய்தியில் காதலனை சேர்த்துவைக்கவேண்டும் என்று காதலி விஷம் அருந்தியிருக்கிறார். இரண்டாவது செய்தியில் பிரிந்த மனைவியை சேர்த்துவைக்கவேண்டும் என்று கணவர் விஷம் அருந்தியிருக்கிறார்.
இரண்டு செய்திகளிலும் நோக்கம் ஒன்றுதான் ஆனால் ஆண் பெண் என்ற பாரபட்சம் காட்டி இந்திய சட்டங்கள் மட்டும் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றன. ஏன் இந்த பாரபட்சம் என்று புரியவில்லை.

திருச்சி: காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாகக் கூறி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள, எம்.பி.ஏ., பட்டதாரி பெண் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி சாலை ரோட்டைச் சேர்ந்த மாரிமுத்து மகள் ராஜேஸ்வரி (23); எம்.பி.ஏ., பட்டதாரி. மண்ணச்சநல்லூரைச் சேர்ந்தவர் குணசேகரன். இருவரும் ஓராண்டாக காதலித்து வந்தனர். காதலில் விரிசல் ஏற்பட்டது.திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை ராஜேஸ்வரி வந்தார். கலெக்டர் கார் நிற்கும் இடத்துக்கு சென்று, கையில் வைத்திருந்த மனுவை தூக்கிப் பிடித்தார், இன்னொரு கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை, "மள மள'வென குடிக்கத் துவங்கினார்.அருகிலிருந்தவர்கள் சத்தம் போட்டவுடன், மகளிர் போலீசார், உடனே அவரைப் பிடித்து, விஷத்தை வெளியே எடுக்க வைத்தனர். ராஜேஸ்வரியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ராஜேஸ்வரி இரண்டு கடிதங்கள் எழுதி இருந்தார். காதலன் குணசேகரனுக்காக எழுதிய கடிதத்தில், "குணா, நான் உன்னை ஒரு சதவீதம் கூட சந்தேகப்படவில்லை உன்னுடன் வாழ ஆசைப்படுகிறேன். நீ முத்தமிட்ட உதடுகளை வேறு யாரும் முத்தமிடக் கூடாது. உன் கைப்பட்ட என் உடலில், வேறு யார் கையும் படக் கூடாது' என, உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.
கலெக்டருக்கு எழுதிய கடிதத்தில், "என் பெயர் ராஜேஸ்வரி. நானும், குணசேகரும் காதலித்து வந்தோம். திடீரென என்னுடன் பேசுவதை குணசேகர் குறைத்துக் கொண்டார்; பழகுவதை நிறுத்தி விட்டார். காரணம் கேட்டபோது, "அப்போது பிடித்தது பழகினேன்; இப்போது பிடிக்கவில்லை' என்கிறார். நம்பிக்கை துரோகத்துக்கு ஆளாகிய நான், மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். இது என்னைப் போல் படித்து, ஏமாறும் பெண்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும். நான் இறந்தால், என் காதலனிடமிருந்து மூன்று லட்ச ரூபாய் வாங்கி, என் பெற்றோருக்கு கொடுக்க வேண்டும்' என, எழுதப்பட்டிருந்தது. இச்சம்பவத்தால் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை:மதுரையில் குடும்ப பிரச்னையால், போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்தவர் திடீரென மயக்கம் அடைந்தார். விசாரணையில், அவர், விஷம் குடித்தது தெரியவந்தது.சமயநல்லூர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(28). கொத்தனராக உள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக, இவரது மனைவி, குழந்தைகள் பெங்களூருவில் வசிக்கின்றனர். பலமுறை சேர்ந்து வாழ மனைவியை அழைத்தும் அவர் வரவில்லை. தன்னுடன் சேர்ந்து வாழும்படி கூறுமாறு மாமனார் குடும்பத்தினரையும் சிவக்குமார் வற்புறுத்தினார். இதுதொடர்பாக நேற்று காலை 11 மணிக்கு சமயநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். நடந்த சம்பவத்தை புகாராக எழுதி தரும்படி போலீசார் கூறினர்.
புகார் எழுதிக் கொண்டிருக்கும்போதே, சிவக்குமார் மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை எழுப்ப முயன்று, பலன் அளிக்காததால் "டென்ஷன்' ஆயினர். "108' ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதித்தபோது, விஷம் குடித்திருந்தது தெரியவந்தது. ஸ்டேஷனிற்கு வரும்முன்பே தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் சிவக்குமார் விஷம் குடித்து வந்துள்ளார். அவர் மீது சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்ய உள்ளனர்.


